சர்வதேச அழுத்தங்களால் கதிகலங்கி போயுள்ள சிறீலங்கா பேரினவாத அரசு, நெருக்கடிகளை சமாளிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பாரியார் அடேல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகசிறீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 10 வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர் போராளிகளின் கழுத்தில் அடேல் பாலசிங்கம் சயனைட் வில்லைகளை மாட்டி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளுமாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேல் நாட்டு பெண் மற்றும் தாதி ஒருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான இளம் சிறுமிகள் உயிரிழக்கக் காரணமாக யுத்தப் பயிற்சிகளை வழங்கிய அடேல் பாலசிங்கம் பிரித்தானியாவின் சர்ரே பிரதேசத்தில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது அந்த செய்தி. அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பிரித்தானியா எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எவ்வாறு பகிரங்க ஆர்ப்பாட்டம் நடத்த முடியும், அரசியல் தலைவர்களுக்கு எதிராக எவ்வாறு போராட்டம் நடத்த முடியும் என பாதுகாப்பு அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளது. இதேவேளை, திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களை தமிழ்மக்கள் வாஞ்சையோடு அடேல் அன்ரி என அழைப்பது வழக்கம். புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக அண்மையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற போராட்டங்கள் சிங்கள பேரினவாதத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.