வியாழன், ஏப்ரல் 04, 2013

உண்ணாவிரதத்திற்கு வராத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை?

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உட்பட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர் ஆனால் நடிகைகள் பெரும்பாலானோர் வராததால் திரைத்துறையினருக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்திருந்தனர். வெளிநாட்டில் இருந்து வரமுடியாத சூழலில் விஜய் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி, உண்ணாவிரதத்துக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்திருந்தனர். ஆனால் உள்ளூரில் இருந்த பல நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக நயன்தாரா, ஸ்ரேயா, தமன்னா, காஜல் அகர்வால், அசின், அஞ்சலி, ஹன்சிகா, டாப்சி, குஷ்பு, சமந்தா, கார்த்திகா, லட்சுமி மேனன் போன்றோர் உண்ணாவிரதத்துக்கு வரவில்லை. இவர்கள் தமிழ்ப் பெண்கள் இல்லை. எனவேதான் வரவில்லை என்று கூறப்பட்டாலும், தமிழ் சினிமாவில் சம்பாதித்து தமிழகத்தில் சொத்துகள் வாங்கும் இவர்கள், தமிழருக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதத்துக்கு வராமல் போய்விட்டார்களே என பலரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் பார்த்திபன், விமல், சசிகுமார், கார்த்திக், சந்தானம், கடல் பட நாயகன் கவுதம் போன்றோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. உண்ணாவிரதம் நிறைவடைந்ததும் வராத நடிகைகள் பற்றி ரசிகர்கள் ஆவேசப்பட்டனர். தமிழ்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களால் முன்னுக்கு வந்த இவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காதது கண்டிக்கத்தக்கது என்றனர். இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்துரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் நடந்துள்ள இனப்படுகொலைக்கு மொழிகளை கடந்த கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். வெளிமாநில நடிகைகள் பலரை தமிழ் திரையுலகம் உச்சத்தில் தூக்கி உள்ளது. நிறைய சம்பாதித்து சென்னையில் வீடுகள் வாங்கி போட்டுள்ளனர். மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்றோரும் தமிழ் படங்களில் நடித்துள்ளனர். இவர்களும் உண்ணாவிரதத்துக்கு வராமல் புறக்கணித்தது கண்டிக்கத்தக்கதாகும். இவர்களை தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.