வெள்ளி, நவம்பர் 09, 2012

ஆயுதக் களஞ்சியத்தை கைப்பற்றிய கைதிகள்! கடும் சமரில் 12 பேர் ....?

 வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குறைந்த பட்சம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தைக் கைப்பற்றிய கைதிகள், அதிரடிப்படையினர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நிலையில் சுமார் 40 பேர் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விஷேட அதிரடிப்படையின் தளபதி ரணவக்கவும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அவசர சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இரவு 8.00 மணிவரையில் 12 பேரின் சடலங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் கொல்லப்பட்ட மேலும் பலரது சடலங்கள் சிறைச்சாலைக்குள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முப்படையினர், விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து சிறைச்சாலைக்குள் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்ட போதிலும், மழை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தாம் கைப்பற்றிய ஆயுதங்களுடன் சிறைக் கைதிகள் சிறைச்சாலை கூரையில் நிற்பதை உள்ளுர் தொலைக்காட்சிகள் இன்றிரவு காண்பித்தன. இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெறுவதையும் தொலைக்காட்சிகள் காண்பித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.